ETV Bharat / bharat

அமைச்சரவைப் பட்டியலில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏவின் பெயர்!

author img

By

Published : Jun 24, 2021, 7:23 AM IST

Updated : Jun 24, 2021, 7:34 AM IST

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உடந்தையாக இருந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாய் சரவணகுமார், புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உயிரிழந்த சிறுமியின் தாய் ஜனநாயக மாதர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

c
c

புதுச்சேரி: குருமாம்பேட் அமைதி நகர்ப் பகுதியில் வசித்துவரும் ஒரு பெண்ணின் 17 வயது மகள் கல்லூரியில் படித்துவந்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில், சிறுமி தனது தாயுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், சிறுமியின் தாய் மார்ச் 23ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பலமுறை பாலியல் வன்புணர்வு

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுசெய்தார். அதனைக் காணொலியாகவும் எடுத்து மிரட்டி தொடர்ந்து பலமுறை அந்தச் சிறுமியை அருண்குமார் பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார். இதனால் அச்சிறுமி உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுமி கேரளாவில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்குச் சென்றார். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது சித்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது அவர் பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தெரியவந்தது.

கேரள காவல் துறையும் புதுச்சேரி காவல் துறையும்

இது குறித்து சித்தி சிறுமியிடம் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறி அழுதுள்ளார். இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பின் சிறுமியின் சித்தி இது குறித்து திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அருண்குமாரை கைதுசெய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமியின் தாய் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை வழக்குப்பதிவுகூட செய்யாமல் அப்பகுதி காவல் துறையினர் மிகவும் அலட்சியப்போக்குடன் செயல்படுகின்றனர்.

அமைச்சர் பட்டியலில் அவர்!

அருண்குமாருக்கு ஆதரவாக இருக்கும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாய் சரவணகுமார், தற்போது புதுச்சேரி அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் தடுத்துவருவதாக சிறுமியின் தாய் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய், "எனது மகளை வலுக்கட்டாயமாகச் சீரழித்து அவரது உயிரிழப்புக்கு காரணமான அருண்குமாரை கேரளா நீதிமன்றத்திலேயே கடுமையான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும். குற்றவாளி அருண்குமாரைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது மாமாவும், தற்போது பாஜக சார்பில் அமைச்சர் பட்டியலில் இடம்பிடித்துள்ள சாய் சரவணகுமாரும் ஈடுபட்டள்ளனர்.

நீதி வேண்டும்

சாய் சரவணகுமார் அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது அவர்கள் ரவுடிகளை வைத்து என்னை மிரட்டிவருகின்றனர். எனது மகள் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன், "பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாது சித்ரவதை செய்து அந்தச் சிறுமி உயிரிழந்ததற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

புதுச்சேரி காவல் துறையில் நம்பிக்கை இல்லாததால் கேரள காவல் துறையில் புகார் தெரிவித்து குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் அதை மூடிமறைக்கும் வேலையில் ஈடுபட்ட அலுவலர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ’நீயா, நானா’ - புதுவை பாஜகவில் அமைச்சர் பதவிக்குப் போட்டி!

Last Updated : Jun 24, 2021, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.